onsdag 6. februar 2008

காதல் கடிதம் -விமர்சனம் 3




-துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

யுத்தம் - காதல் இவை இரண்டையும் எவராலும் தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என்பதைக் காதல் கடிதம் உணர்த்தி நிற்கின்றது. வோட்டர்ஃபோல்ஸ் மூவி மேக்கர்ஸ் (Waterfalls Movie Makers) இன் இரண்டு வருட கடின உழைப்பினால் காதல் கடிதம் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

ஜமுனாவாக அனிஷாவும், கார்த்திக்காக ஸ்ரீபாலாஜியும் இரண்டு இந்தியப் புதுமுகங்கள் காதல் கடிதம் மூலம் அறிமுகம். போர்ச் சூழ்நிலையில் வவுனியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஜமுனா இசை பயில்வதற்காகச் சென்னை செல்கின்றாள். கார்த்திக் எஃப் எம் (FM) வானொலி நிலையமொன்றில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் ஒலிப்பதிவாளராகப் (DJ) பணியாற்றுகின்றான்.

ஜமுனா எஸ்.எம்.எஸ் மூலம் பாடல்களை விரும்பிக் கேட்க, கார்த்திக் அவளின் விருப்பத் தெரிவுகளைத் தொகுத்து வானொலி மூலமாக வழங்குகின்றான். கார்த்திக் மனதில் படிப்படியாகக் காதல் மலர்கின்றது.
ஒரு நாள் கார்த்திக் 'I Love You Yamuna' எனத் தனது காதலை ஜமுனாவிடம் வெளிப்படுத்துகின்றான். எல்லோரும் போல 'I Love You Yamuna' என்று கார்த்திக்கும் சொல்கின்றான் என நினைத்து, அவனின் காதலை மறுக்கின்றாள். மறுதலிக்கின்றாள் ஜமுனா.
தனது அப்பாவே தனக்கு எல்லாம் என்றும், ஊருக்குத் திரும்பிய பின்னர் கடிதம் எழுதுவதாகவும் கூறிப் படிப்பு முடிந்த பின்னர் வவுனியாவிற்கு ஜமுனா திரும்புகின்றாள்.

இலங்கையில் நிகழும் யுத்தம் ஒரு நாள் ஓயும், நான் தனியே வயலின் இசைக் கச்சேரி நடத்துவேன் என்று ஜமுனா தனது கல்லூரி நாட்களில் கனவு கண்டாள். ஜமுனாவின் கடிதத்தைத் தினமும் எதிர்பார்த்து, ஏமாந்து போகும் கார்த்திக் அவளின் பிரிவால் ஒவ்வொரு கணமும் வாடுகின்றான். கடிதத்தைக் காணாமல் ஏங்கித் தவிக்கும் கார்த்திக் சென்னையிலிருந்து ஜமுனாவைத் தேடி வவுனியா செல்கின்றான். இறுதியில் என்ன நடக்கின்றது என்பதை இயக்குனர் இலங்கையின் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண பொது மக்கள் எதிர்கொள்ளும் நிலக்கண்ணி வெடியுடன் தொடர்புபடுத்தியிருக்கின்றார்.

யுத்தத்தைப் பார்த்துப் பார்த்து எங்களுக்குப் பழகிப் போச்சு என்ற ஜமுனாவின் தந்தையாக நடிக்கும் நடராஜசிவத்தின் வசனம் காதுகளில் தொடர்ந்தும் எதிரொலிக்கின்றது.

வசீகரனின் வசீகரமான வரிகள் தூய்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. யாழ் தேவி பிரயாணத்தின் சந்தோஷமான நிமிடங்களை யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்…என்ற பாடலின் மூலமாக மீண்டும் இரைமீட்டிப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நீண்ட யாழ்தேவி பிரயாணத்தின் இன்பகரமான நிமிடங்களை இழந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இப் பாடல் ஓர் விருந்தாக அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்படும் யாழ்தேவி 2.30 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது.
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட வசீகரன் சிவலிங்கம் தனது இளமைக் கால நினைவுகளையும் உணர்வுகளையும் வரிகளில் வடித்தெடுக்க, உதயா அவ் வரிகளுக்கு இசையமைத்து மேலும் மெருகூட்டியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் வவுனியா உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீரூற்றுக்கள், மலைகள், பூங்கா என இயற்கைக் காட்சிகள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இயக்குனர் முகேஷின் முதல் முயற்சி இது. வினோலியாவின் மூலக்கதை காதல் கடிதமாக வரையப்பட்டுள்ளது.

காதல் கடிதம் ஒலி இறுவெட்டு ஆல்பம் 2005ஆம் ஆண்டு எனது கைகளுக்குக் கிட்டியது. அதை முதன் முதலாகச் செவிமடுத்த எனக்கு யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாத பல மகிழ்ச்சிகரமான நினைவுகள் என் மனதைத் தொட்டுச் சென்றன. அவற்றுள் நீண்ட யாழ்தேவிப் பிரயாணம், பனங்காய்ப் பணியாரம், கிழுவை மரம், கூழ், பனையோலை பாய், காங்கேசன்துறை சீமெந்து, கீரிமலைப் பனங்கள்ளு, சுன்னாகத்து மாங்காய், கொடிகாமத்துத் தேங்காய், கீச்சு மாச்சு தம்பளம்கீயா மாயா தம்பளம் மாயா மாயா தம்பளம் போன்ற என்றுமே மறக்க முடியாத நினைவுகளில் நிரந்தரமாகப் பதிந்துள்ள வார்த்தைகளும், வசனங்களும் திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்டுவதைக் காணலாம்.

'ஈழப் பெண்ணே' பாடலை மதுபாலகிருஷ்ணனும், 'யாரும் எழுதாத பாடல் கேட்கத் தானே ஆசை' பாடலை உன்னிமேனனும், ஜீவா ரேகாவும், 'எழுது எழுது' பாடலை ஸ்ரீநிவாசும், அம்பிலியும், 'ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே' பாடலை விது பிரதாபனும், 'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே தண்டவாளம்' என்ற பாடலை சாம் பி.கீர்த்தனும் பாடியுள்ளனர். ஆயினும் கிருஸ்ணராஜ் குழவினர் பாடிய 'பனங்காய் பணியாரம்' பாடலைத் திரைப்படத்தில் உள்ளடக்காதது கவலைக்குரியது. You Tube: பனங்காய் பணியாரம் காணொளி

mailto:dushi.pillai@gmail.com

tirsdag 5. februar 2008

காதல் கடிதம்- விமர்சனம் 2

யுத்த பூமியில் நீண்டு வரும் இரத்தவெளியின் வேர்கள் எதிலெல்லாம் ஊடுருவி உயிர்குடிக்கிறது என்பதை உருக உருக எழுதியிருக்கும் கதையே இந்த கடிதம்.

வானொலியில் பணிபுரியும் ஸ்ரீபாலாஜி. இசை கற்பதற்காக சென்னை வந்திருக்கும் இலங்கை பெண் அனிஷா. ஆரம்பத்தில் தவறான புரிதல்களில் இருக்கும் இருவரையும் நேர்க்கோட்டில் இணைக்கிறது நட்பு. ஒரு கட்டத்தில் அனிஷா மேல் காதலாகிறது பாலாஜிக்கு. காதலை சொன்னால் நட்பு சிதறிவிடுமோ என்ற அச்சத்தில் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்குகிறார்.

ஆஹா... பல படங்களில் கடைசிவரை காதலை சொல்லாத நாயகன் மாதிரியா இவரும்? என்று நமக்குள் எழும் சந்தேகத்தை 'நங்' கென்று குட்டி வேறுமாதிரி நகர்த்தப்படுகிறது திரைக்கதை.

படிப்புமுடிந்து அனிஷா ஊருக்கு திரும்பும் வேளையில் காதலை சொல்கிறார் நாயகன். என்ன பதில் சொல்வார் நாயகி? ஸ்ரீபாலாஜியின் படபடப்பு படம் பார்ப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.

தனது பதிலை ஊரிலிருந்து கடிதம் மூலம் தெரிவிப்பதாக விடைபெறுகிறார் அனிஷா. ம்...ஹூம். தபால்காரனின் முகம்பார்த்து வெறுத்தப்போன நாயகன், இலங்கைக்கே செல்கிறார். போன இடத்தில் ஸ்ரீபாலாஜியின் கையில் கிடைக்கும் அந்த காஸ்ட்லியான கடிதம் சொல்லும் விடை என்ன? படம் பாருங்களேன்!

குழந்தையின் பிஞ்சுவிரல் ஸ்பரிசம் போன்ற கதை. மனசை நைந்த துணியாய் மாற்றும் க்ளைமாக்ஸ். இயக்குனர் முகேஷ் எழுதியிருக்கும் இந்த கடிதம் மரணத்தின், இழப்பின் வலி அறியாதவர்களின் முகவரிகளுக்கும் அஞ்சல் செய்யப்படும் ஆழமான வரிகளாக மனசில் வேறூன்றுகிறது.

நாயகன் ஸ்ரீபாலாஜி அடிப்படையில் கிரிக்கெட் வீரராம். புதுமுகம் போலன்றி நடிப்பிலும் நல்ல ஸ்கோர் எடுத்துள்ளார். நடிப்பின் சாயல் தெரியாத அளவுக்கு இயல்பை வெளிப்படுத்தியுள்ளது சிறப்பம்சம். காதலியின் கடிதம் பார்த்து கதறும் இடத்தில் நம்மையும் கலங்கடிக்கிறார். பரத், சிம்பு போன்ற நடனத்திறமையிலும் அட போடவைக்கிறார்.

நாயகி அனிஷாவுக்கு அளவான வசனங்களே. எனினும் பேசாத இடங்களில்கூட இவரது விழிகளில் கொட்டுகிறது உரை அருவி.
இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருக்கும் நடராஜசிவம் நாயகியின் தந்தையாக வரும் காட்சிகளில் நம்மூர் கல்யாண்குமார்,ராஜேஷ் போல கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி மனசுக்குள் நங்கூரமிடுகிறார்.

கொழும்பு, வவுனியா, கிராமப்புற பகுதிகள் என பாஸ்போர்ட், விசா எதுவுமின்றி, தியேட்டர் டிக்கெட் கட்டணத்திலேயே இலங்கையை சுற்றி பார்த்த திருப்தி. ஒளிப்பதிவாளருக்கும் தரலாம் ஒரு பூங்கொத்து.

கதை, கதாநாயகன் தவிர படத்தில் இருக்கும் இன்னொரு ஹீரோ இசை. 'எழுது எழுது அன்பே ஒரு கடிதம்...' 'நதியின் பெயரில் பிறந்தவளே....' 'யாழ்தேவியில்....' போன்ற பாடல்கள் சுக ராகங்களாய் செவியினிக்க செய்கிறது.

சில இடங்களில் நிசப்தங்களை கடைபிடித்து பின்னணி இசையிலும் நேர்த்தியை நிறைத்துள்ள இசையமைப்பாளர் உதயாவுக்கு நல்ல எதிர்காலம் உதயமாக வாழ்த்துக்கள். இரயில் பயண காட்சிகளில் பின்னணிக்கு எடுத்துள்ள சிரமங்களும் புரிகிறது.

பாடலாசிரியர் வசிகரனின் வரிகளிலும் கலப்படமற்ற தூய்மை பாராட்டுக்குரியது.

'தமிழ்நாட்டுக்கு தங்கள் உடமைகளை விட்டுட்டு அகதியா வந்தவங்கபோலதான் என்னோட காதலியை இழந்து நானும் ஒரு அகதியா திரும்பிப் போறேன்' பேனாவில் கண்ணீர் ஊற்றி எழுதியதைபோல மசை கனக்கச் செய்யும் அந்த வசனம், தியேட்டரை வி்ட்டு வெளியே வந்தும் எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது. எதிரொலி பாதிக்கவேண்டிய இடங்களில் பரவட்டும்.

படிக்கவேண்டிய கடிதம் இந்த 'காதல் கடிதம்'.

+ கதை நாயகன் க்ளைமாக்ஸ்இசைஒளிப்பதிவு
- முதல்பாதியில் வரும் சில காமெடி காட்சிகள்

காதல் கடிதம்- விமர்சனம் 1

குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பார்த்து எங்களுக்கு பழகிப்போச்சு' என்கிற அந்த அப்பாவின் குரல், அடி வயிற்றை பிசைந்து கொண்டேயிருக்கிறது.

காதலின் வலியையும், வாழ்க்கையின் உத்தரவாதமின்மையையும் இதை விட அழுத்தமாக யாரால் சொல்லிவிட முடியும்?
இலங்கையிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வரும் அனிஷா, இங்கே ஸ்ரீபாலாஜியை சந்திக்கிறார். முதலில் பிணக்கமும், இரண்டு மூன்று ரீல்களுக்குள்ளாகவே இணக்கமும் ஏற்படுகிறது இருவருக்கும். காதல் என்ற வார்த்தைக்கு இருவருமே கொண்டிருக்கும் ஒரே அர்த்தம் 'நம்பிக்கையில்லை' என்பதுதான். ஆனால், மனசு 'ஒன்வே'யில் பயணிக்க ஆசைப்படுகிற சாத்தான் ஆயிற்றே? கொஞ்சம் கொஞ்சமாக அனிஷாவின் மேல் காதல் கொள்ளும் பாலாஜி, அதை வெளிப்படுத்துகிற நாளில் இலங்கைக்கு பறந்து விடுகிறார் அனிஷா. 'யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும்.

ஊருக்கு போய் கடிதம் எழுதுகிறேன' இதுதான் அனிஷா பாலாஜியிடம் பேசிய கடைசி வார்த்தை! ஊருக்கு போன அனிஷா காதல் கடிதம் எழுதினாரா? அது பாலாஜியின் கைகளுக்கு வந்து சேர்ந்ததா? இதுதான் முடிவு.

ஹீரோ, ஹீரோயின் இருவருமே புதுமுகங்கள். நடிப்பும் அத்தனை கச்சிதம். வழக்கமாக ஹீரோயின் அறிமுகங்கள் தமிழ்சினிமாவில் எப்படியிருக்கும்? இதில் வேறு மாதிரி. இவரை சிக்னலில் சந்திக்கும் ஹீரோவும் கண்டவுடன் காதல் கொள்ளாமல் மரபை உடைத்திருப்பது ஆறுதல்.

சங்கீத குருவே சந்தேக குருவான பின்பு, மேற்கொண்டு படிப்பை எப்படி தொடர்வது? தவிக்கும் அனிஷாவுக்கு அற்புதமான ஒரு ஐடியாவின் மூலம் அவரை மீட்கும் ஸ்ரீபாலாஜி பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். காதலில் விழுந்தபின் இவரிடம் தொற்றிக் கொள்ளும் தயக்கத்தையும் அநாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எஸ்.எம்.எஸ் மூலம் பாடல் கேட்கும் அனிஷாவுக்கு, வேறொரு நேயரின் விருப்பமாக அதே பாடலை ஒலிக்க செய்வது அழகு.

ஸ்ரீபாலாஜி இலங்கைக்கு போய் இறங்கியதும், மொத்த தியேட்டரும் அமைதியாகிவிடுகிறது. என்னவோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு மட்டும் மனசை பிசைய ஆரம்பித்துவிடுகிறது.

படத்தில் இந்த இலங்கை பகுதி முழுவதும் நமக்கு என்னென்னவோ உணர்வுகளை கொடுக்கிற நேரத்தில், அதை மேலும் கனமாக்குகிறது இலங்கை அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் நடிப்பு.
ஆரம்ப கூச்சல்களுக்கு (உபயம் காதல் சுகுமார்) நெளிகிற நம்மை, காதல் என்ற மெல்லிய இழையால் கட்டிப் போட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

அதன்பின் இலங்கைக்கு பயணிக்கிற கதையை தன் வசம் இழுத்துக் கொள்கிறது கேமிராவும், இசையும், வசனங்களும்! யாழ்தேவி என்ற இரயிலையும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இலங்கையின் உள்ளடங்கிய தமிழர் பகுதிகளையும் பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது. அதுவும் யாழ்தேவியில் என்ற பாடலும், அந்த மெட்டும், அந்த தாளமும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் வரிசையில் அமையும்! இசையமைப்பாளர் உதயா எதிர்கால தமிழ்சினிமாவின் நம்பிக்கை வரவு. ஒளிப்பதிவாளர் பி.ஆர்.ராஜனையும் அந்த வரிசையில் வைக்கலாம்.

பெயருக்கேற்றார் போல் வசீகர வரிகளை தந்திருக்கிறார் பாடலாசிரியர் வசீகரன்.

சென்சாரின் கத்தரிக்கு சின்ன வேலைகூட தராமல், ஈழத்தின் வேதனையை எடுத்து சொல்லிவிட முடியுமா? ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் முகேஷ்! மனசுக்குள் விதையாக விழுந்து, மரமாக முளைத்து நிற்கும் ஒரு சில பதிவுகளுக்கு மத்தியில், காதல் கடிதமும் ஒரு முக்கியமான பதிவு. சந்தேகமேயில்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

mandag 4. februar 2008

காதல் கடிதம் - திரைப்பொங்கல்

காதல் கடிதம் - உலகத் தமிழருக்கான திரைப்பொங்கல்!
- வசீகரன் (ஒஸ்லோ,நோர்வே) -

உலகெங்கிலும் வாழுகின்ற எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடல் முதல் உயிர் வரை வலிகள் சுமந்த வண்ணமே வாழ்ந்து வருகின்றோம்: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் உங்களுக்கு இணையத்தின் வாயிலாக என் இதயத்தின் பொங்கல் வாழ்த்துகள்.

காதல் கடிதம் இறுவட்டின் மூலம் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமான ஓர் தமிழனின் உள்ளத்தில் இருந்து எழுகின்ற குரல். எங்கள் கலைகளின் வளர்ச்சி தொடர்பாகவும்இ எங்களுடைய காதல் கடிதம் திரைப்படம் சார்பாகவும் உங்களோடு மனம் விட்டுப் பேசவே இந்த மடலை எழுதுகின்றேன்.

எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளது. எம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும்இ முழுநீளத் திரைப்படங்களாகவும் பூத்துக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில்இ போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் நிலையே புலம் பெயர் நாடுகளிலும் சரி தாயகத்திலும் சரி காணப்படுகின்றது. அங்குள்ள சூழ்நிலைகளைக் கடந்தும் அபூர்வமானதும்இ அற்புதமான படைப்புகள் சில வருவதை எண்ணி நான் பலமுறை வியப்படைந்திருக்கின்றேன்.

கடந்த ஜந்து வருடங்களுக்கு முன் இசை உலக வரலாற்றில் புதிய முயற்சியாக வெளிவந்த எங்கள் காதல் கடிதம் இசைத் தொகுப்பு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த இசைத் தொகுப்பு தமிழ் மக்கள் மத்தியிலும் பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
உலகத் தமிழ் உறவுகள் அனைவருமே உன்னதமான ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள். அதன் பின் நாங்கள் என்ன செய்தோம் என்ற கேள்வி உங்களில் பல பேருக்கு எழுந்திருக்கும். அப்படி உங்கள் மனதில் பல கேள்விகள் எழுந்தால் அதுவும் நியாயமானது.

இந்த இசைத் தொகுப்பின் வெற்றிக்குப் பின் நானும் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா அண்ணனும் இணைந்து இப்பாடல்களை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கினோம். அன்றில் இருந்து இன்றுவரை நாங்கள் என்னதான் எங்கள் வழமையான பணிகளில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் காதல் கடிதம் திரைப்பட தயாரிப்பு பற்றிய தீப்பந்தம் ஒன்று எங்கள் மூளையின் ஒரு பகுதியில் எரிந்து கொண்டே இருக்கும். விடாமுயற்சியோடு நிறையவே விளையாடினோம்.

ஓர் இலக்கை அடைவதற்கான அனைத்து முறைகளையும் பரிசித்துப் பார்த்தோம்.

எங்கள் வாழ்வை நாமே பதிவு செய்யவேண்டும். அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று எல்லோரும் எண்ணுவார்கள்இ ஆனால் அணில் போன்றே செயற்பட எத்தனை பேருக்கு இங்கே ஆர்வம் உள்ளது. நாங்கள் தார்மீகமான கடமையுணர்வோடு எங்கள் வேலையைத் தொடங்கினோம். இலங்கைஇ இந்தியாவில் வாழ்கின்ற எமது கலைஞர்களோடுஇ தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத்துறை சார்ந்தஇ தேர்ந்த கலைஞர்களின் ஆதரவையும் திரட்டிஇ இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கான வடிவமைப்பு வேலைகளை ஆரம்பித்தோம்.

ஆனால் ஓர் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் திரைப்படத்துறை சார்ந்து எனக்கு ஒரு துளிகூட அறிவோஇ அனுபவமோ இருக்கவில்லை. ஆனால் இசையமைப்பாளர் உதயா அண்ணாவிற்கு நிறையவே இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான திட்டமிடுதல் வேலைகளை தொலைபேசி வாயிலாகவே ஒழுங்கு செய்தோம்.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து ஒரு பக்கம் தயாரிப்பிற்கான வேலைப்பணிகளும்இ மறுபுறம் நல்ல ஒரு தயாரிப்பாளரைத் தேடும் படலமும் நடந்துகொண்டிருந்தது. தமிழ்நாதம் இணையத்தளத்தின் மூலமும் ஏனைய தமிழ் ஊடகங்கள் மூலமும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். இந்தத் திரைப்படத்திற்கான கதையை உதயா அண்ணாவின் மனைவி திருமதி வினோலியா உதயா அவர்கள் எழுத மறுபுறத்தில்இ தொழில்நுட்பக் குழுவை இணைக்கும் பணியில் முழுமூச்சாக உதயா அண்ணன் அவர்கள் செயற்பட்டார். இத் திரைப்படத் தயாரிப்பிற்கான திட்டத்தில் எத்தனையோ கலைஞர்களை வெளிநாடுகளில் இருந்தும் இணைப்பதற்கு முயன்றோம். கதாநாயகியாக ஈழத்தமிழ் பெண்ணே நடிக்க வேண்டும் என்று எண்ணி விளம்பரம் செய்திருந்தோம். ஒருவர் கூட முன்வராத நிலையிலே தமிழகத்தில் இருந்தே ஈழப்பெண்ணாக நடிப்பதற்கு அனிஷாவை தேர்ந்தெடுத்தோம். கதாநாயகனாக சிறிபாலாஐpயை தெரிவுசெய்தோம்.

உதயா அண்ணாவின் தமிழகத்தில் உள்ள நண்பர்களே பெரிய உதவியாக இருந்தார்கள். இத் திரைப்படத்தை இயக்குவதற்காக இயக்குனர் சேரனிடம் பணிபுரிந்த உதவி இயக்குனர் முகேஷ் அவர்களையும்இ ஒளிப்பதிவாளராக பி.ஆர்.ராஐனையும் உதயா அண்ணா தெரிவுசெய்தார். இப்படிப் பல தொழிநுட்பக் கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் தான் ஒரு சிறந்த தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று புலம்பெயர்நாடுகளில் நானும், இந்தியா, இலங்கையில் உதயா அண்ணாவும் தேடினோம். எத்தனையோ உறவுகள் எங்களோடு இணைவதாகச் சொல்லி இறுதியில் அனைவருமே விலகிக்கொண்டார்கள்.

என்ன சினிமா என்றால் வீண்போன துறையாகவே எம்மவர்கள் பார்ப்பதாலோ என்னவோ.? ஆனால் இலங்கையில் உள்ள உதயா அண்ணாவின் இனிய நண்பர் தேவதாசன் மூலம் தில்லைநாதன் தில்லைவண்ணன் என்கிற துடிப்புள்ள தயாரிப்பாளர் எங்களுக்கு அறிமுகமானார்.

திரைப்படத் தயாரிப்பு வேலைகள் அனைத்துமே துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. திரைப்படத் தயாரிப்பு வேலைகளுக்காக 25 நாட்கள் இலங்கையில் எம் திரைப்படக் குழுவினர் கடுமையாக உழைத்தார்கள். 75 வீதமான படப்பிடிப்பு பல இன்னல்களுக்கு மத்தியில் இலங்கையிலேயே நடைபெற்றது இந்த வேளையில் எல்லாம் தமிழ்நாதம் இணையதளத்தின் ஊடாகவும், யாழ் இணையம், தமிழமுதம், பதிவுகள் போன்ற பலதரப்பட்ட இணையத்தளங்களும், உதவி புரிந்தன.

இலங்கையில் சக்தி.எப்.எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி முழுமனதோடும்இ எங்களுக்கு யாழ்தேவிப் பாடல் காணொளியை உருவாக்குவதற்கு பெரிய உதவியாக அனுசரணை வழங்கினார்கள். இதன்பின் கனடாவில் உள்ள வானொலிகள், முறையே கனேடியத் தமிழ் வானொலி, கனேடியப் பல்கலாச்சார வானொலி, ஒலி.எப்.எம், கீதவாணி போன்ற ஏனைய ஊடகங்களும் முழுமையான ஆதரவை வழங்கின. தமிழ் பத்திரிகைகள் அத்தனையும் எங்களுக்கு, எங்கள் திரைப்படம் சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க பெரிதும் உதவின. இங்கு யாரையாவது தவறவிட்டால் பெரியமனதுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.

இதே போன்று இங்கு ஐரோப்பாவில் ஐ.பி.சி தமிழ் வானொலி, நோர்வேயில் உள்ள தமிழ் முரசம் வானொலி முன்னாள் தமிழ் ஒளி தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்சி, தரிசனம் தொலைக்காட்சி போன்றவையும் முழுமையான ஒத்துழைப்பையும் தந்தன. இதைவிடவும் யாழ் இணையத்தளம் இன்றுவரை எங்களை உற்சாகப்படுத்தி வருகின்றது. என் ஞாபக அறைகளில் எத்தனையோ இணையத்தளங்கள் நன்றியுணர்வோடு பதிவில் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ தனிப்பட்ட நபர்கள், ஊடக நண்பர்கள் என எங்களுக்கு ஒரு பெரிய நட்பு வட்டாரமே உருவாகியிருக்கின்றது. காதல் கடிதம் திரைப்படம் உருவாவதற்கு எங்கள் ஊடகங்களோடு தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற தமிழ்சினிமா.கொம், சினிசவுத், தற்ஸ்தமிழ், வெ;பஉலகம், இன்டியாகிளிற்ஸ் இணையப்பத்திரிகைகள், சஞ்சிகைகள்கூட பாரிய ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளன, கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சுழியத்தில் இருந்து ஆரம்பித்த கலைப்படைப்பு, எத்தனையோ இன்னல்களைத் தாண்டி திரையரங்குக்க வருவதற்கு தயாராக இருக்கின்றது.

ஆனால் நான் இங்கு இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முக்கியமாக ஒரு தடைக்கல்லாக இருப்பது இத் திரைப்படத்தை சந்தைப்படுத்துதல் அல்லது உலகமெங்கும் வெளியீடு செய்வது. அது பற்றி உங்களோடு விரிவாக எங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

தமிழ்சினிமா தொடங்கி எழுபத்து ஜந்து ஆண்டுகள் கடந்து ஓடிவிட்டது. அமெரிக்காவின் படங்களுக்கு இணையான தொழில்நுட்பத்தோடு போட்டி போடத் தயாராக இருக்கின்ற நிலையில் நாங்கள் எங்கே நிற்கின்றோம்.? என்பதுதான் என் முதல் கேள்வி. எங்கள் திரைப்படங்கள் உருவாகாமல் இருப்பதற்கு என்ன காரணம்? புலம்பெயாந்த நாடுகளில் எல்லா வசதிகளோடு இருக்கின்ற எங்களால் ஏன் தமிழச் சினிமாவிற்கும், தமிழக சினிமாவிற்கும், பெருமை சேர்கின்ற வண்ணம் திரைப்படங்களைத் தயாரிக்க முடியாது. அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நாங்கள் ஏன் பின் நிற்கின்றோம்? இப்படி பல கேள்விகள் எங்கள் முன் உள்ளது. இப்படியான சூழ்நிலையில் தான் காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவர இருக்கின்றது. இத் திரைப்படத்தை திரையிடுவதற்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருப்பதற்கும், விநியோகம் செய்ய முடியாமல் இருப்பதற்கும் யார் காரணம்? எங்களுடைய இந்தக் காதல் கடிதம் திரைப்படம் 2006 ஆண்டே திரைக்கு வந்திருக்க வேண்டிய ஒர் திரைப்படம். ஆனால் இவ்வளவு காலமும் இத்திரைப்படத்தை வாங்க ஒருவரும் முன்வராத நிலையில் இருந்தோம்.

ஈழத்தமிழர்களாகிய எங்களில் சிலர் பெரிய விநியோக நிறுவனங்களை வைத்திருந்தும்கூட எங்களை ஊக்கப்படுத்தவோ, கைகொடுக்கவோ ஒருவரும் முன்வரவில்லை.! இத்திரைப்படத்தை விற்பதற்கு எங்கள் தயாரிப்பாளர் ஒன்றரை வருடமாக போரடி வந்தார். ஆனால் திடிரென்று ஓர் நாள் தமிழகத்தில் உள்ள திரு ராமநாதன் என்கின்ற ஒரே ஒரு விநியோகஸ்தர் தான் எங்கள் திரைப்படத்தின் தரம், மேன்மை கருதி இதைத் தமிழகத்தில் வெளியிட முன்வந்திருக்கின்றார். ஆனால் இலங்கையில் தயாரிப்பாளரே திரையிட வேண்டிய நிலையில் தேவதாசன் மட்டுமே தனிமனிதனாக போராடிக் கொண்டிருக்கின்றார். அவருடைய ஆணித்தரமான முயற்சியை முறியடிக்கும் வகையில் பணம் படைத்த சக்திகள் சிலரால் இலஞ்சமாக வீசப்பட்டு, கிடைத்த மூன்று திரையரங்குகள்கூட மறுக்கப்படுகின்றது. இது வர்த்தகம் தொடர்பான கலைத்துறையாக இருந்தாலும் காசு மட்டும் முதன்மையாக பார்க்கப்படுகிற மிகக் கீழ்த்தனமான நிலையில் எங்கள் தமிழ்ச்சினிமா மாறிக் கொண்டிருக்கிறது. இவர்களையும் நாங்கள் தான் உற்சாகப்படுத்தி வளர்க்கின்றோம். இதை தடுத்து நிறுத்தி தரமான கலைப்படைப்புக்கள் வெளிவர யார்தான் உதவுப் போகின்றார்கள்?

இது எங்களைப் போன்று திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும் உள்ள பெரிய பிரச்சனை. என்ன மக்களே உங்களிடம் தான் கேட்கின்றேன். எங்கள் குரல் கேட்கின்றதா? எங்கள் வாழ்வைத் தரமான, கனமான சினிமாப் படைப்பாக உருவாக்கி மக்கள் சிந்தனையை உயர்த்த வேண்டும் என்கிற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்களோடு கைகோர்த்து அவர்களின் குரலாகவும் ஓங்கி ஒலிக்கின்றேன்!. நீங்கள் உடுக்கின்ற உடை, உண்ணுகின்ற உணவு, குடிக்கின்ற தண்ணீர் முதல் வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் அனைத்துக்குமே பணம் கொடுத்து அனுபவித்து மகிழ்வீர்கள். ஆனால் பல வகையான கலைகளையும் உள்வாங்கிய சங்கமமாக வெளிவரும் சினிமாத் திரைப்படங்களையும், இறுவட்டுகளையும், காணொளிப் பதிவுகளையும் ஏன் காசு கொடுத்து வாங்கி மகிழக்கூடாது. எம்மைப் போன்று எத்தனையோ கலைஞர்களின் உள்ளக் குமுறல்களுக்கு உங்கள் காதில் விழவில்லையா..? கலைப் படைப்புக்கு ஒத்துழைப்புக் கொடுக்காத ஒவ்வொரு தமிழனும் இனி வெட்கப்பட வேண்டும். தமிழன் உயாந்தவனாக மாற புதிய சிந்தனைகள் வளரவேண்டும். இத்தனைக்கும் எம் தாயகத்தில் நிகழ்கின்ற அனைத்து அவலங்களையும் உணர்ந்து தார்மீக உணர்வோடு செயல்படுகின்றோம். இல்லையேல் அதற்கும் சிலபேர் விமர்சனம் என்ற பெயரில் ஏதாவது புதிதாகச் சொல்லி எங்கடை குரல்வளைய நசுக்க வருவினம்.

கலை மக்களுடைய வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கின்றோம். எத்தனை எத்தனை இழந்தோம்..? அத்தனையும் திரும்பப் பெறுவதற்கு இந்தக் கலைப்படைப்புகள் தானே எமக்கு ஆறுதல் தரும். அப்போது நெருப்பில் இருந்து எழுகின்ற பறவையின் உற்சாகம் எமக்கு வரும். ஆனால் நாங்கள் எல்லாத்துறையிலும் திறம்பட வளர்ந்திருக்கின்றோம். இந்தத் திரைப்படத்துறை ஒன்றைதவிர என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். இதையும் ஏன் விட்டுவைப்பான் என்பதே எமது தீவிரமான கலைப்பயணத்தின் தொடக்கம்.

காதல் கடிதம் திரைப்படத்துக்கு எங்களை, உங்களை நம்பி பணம் முதலீடு செய்த உறவை எப்படி நாங்கள் காப்பாற்றப் போகின்றோம்.? இது எங்கள் சமூகத்தின் முன் நாங்கள் வைக்கின்ற உள்மன ஆதங்கம். காதல் கடிதம் கதையை, திரைக்கதையை, இசையை, பாடல்களை, ஒளிப்பதிவை, எங்கள் வாழ்விடங்களை நம்பி பணத்தைக் கொட்டி ஒரு நல்ல மனதுடன் வந்த தயாரிப்பாளரை தோல்வியடையச் செய்யப் போகின்றோமா? அல்லது பல கோடி கைக்களாய் இணைந்து வெற்றியடையும் வகை செய்திடுவோமா.

நான் தாயகத்தில் உள்ள உறவுகளை உரிமையோடு இப்போது கேட்க முடியாது.! அவர்கள் படுகின்ற துன்பங்கள், வேதனைகள், இழப்புகள் எல்லாவற்றையும் நாம் அறிவோம் ஆகவே புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் உங்களிடம் தான் உதவிடக் கேட்கின்றோம். உங்களை நம்பியே எங்கள் படைப்பை நாங்களாவே வெளிக்கொணரவும் இருக்கின்றோம்.

நீங்கள் எப்படி எங்களை ஊக்கப்படுத்தப் போகின்றீர்கள்? எந்த வகையில் உதவப் போகின்றீர்கள். ஒரு ஆணிவேர் திரைப்படம் வந்தது, யாருமே எதிர்பாராத வெற்றி பெற்றது. அதன் பின் வந்த எங்கள் வாழ்வு சார்ந்த எந்தத் திரைப்படமும் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை! இதுதான் உண்மை. ஏங்கள் படைப்புகள் எம்மவர்களுக்கு நம்பிக்கையில்லையா? எமது உறவுகளால் மதிக்கப்படாமல் நாங்கள் எப்படி தமிழக உறவுகளிடம் மதிப்பளிப்பீர்களா என்று எதிர்பார்ப்பது? அவர்களுக்கு நாங்களே பெரிய வர்த்தக சந்தையாகவும், முதுகெலும்பாக செயற்படுவது மகிழ்வான விடயம். ஆனால் எங்களின் நிலைதான் என்ன.? வியாபார நோக்கோடு மட்டுமே வருகின்ற படங்கள் தான் வெற்றிபெற வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டதா? சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படுகின்ற படங்கள் வெற்றி பெறக் கூடாதா? இது எங்கள் உறவுகள் சிந்திக்க வேண்டிய நேரம்! அண்மையில் வெளிவந்து இராமேஸ்வரம் திரைப்படம் எங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பபைப் பெறாமல் போனதற்கு யார் காரணம்? ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே விசத்தனமான விமர்சனங்களை விதைப்பதில் இருந்து விடுபட்டு எம் இளம் சமுதாயம் எடுக்கின்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா?

கிட்டத்தட்ட தமிழன் புலம்பெயாந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்கள் வாழ்வை ஆவணமாக்குவதற்குரிய நவீன தயாரிப்புத் திட்டங்கள் இல்லாது வெறும் மேடை நிகழ்வுகளில் நனைந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் திரும்பிப் பார்க்கும் போது காத்திரமான ஆவணப் படைப்புகளாக என்னதான் இங்கே மிச்சப்போகின்றது? மிச்சியிருக்கின்றது.
எங்கள் நிகழ்கால வாழ்வை அன்றன்றே பதிவு செய்து காட்டுவது போல் இறந்தகால, எதிர்கால் நிகழ்வுகைள பதிவுசெய்ய சினிமாவே சிறந்ததும், முதன்மை வாய்ந்த ஊடகமாகும். காதல் கடிதம் திரைப்படத்திற்கு, படைப்பின் தரம் சார்ந்து கிடைக்கப் பெறுகின்ற விமர்சனங்களைப் பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்வாக இருக்கின்றது. எங்கள் மக்களிடம் இருந்தும் பல விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம்.

இக் கடிதத்தின் நிறைவுப் பகுதிக்கு வருகின்றேன். உங்கள் நாடுகளில் இருந்து இரண்டோ அல்லது ஐந்தோ குடும்பங்களாக அல்லது நண்பர்களாக இணைந்து எங்களுடைய இத்திரைப்படத்தை உங்கள் நாடுகளிலும் திரையிடுவதற்கு முன் வாருங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்யலாம் என்பதைக் கூற நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இதை வர்தக ரீதியிலோ அல்லது நட்புரீதியிலோ கதைத்து ஒரு மக்கள் விநியோக வலையை உருவாக்க காதல் கடிதம் திரைப்படம் முன் உதாரணமாக இருக்கட்டும். இந்த தயாரிப்பாளர் தொடாந்தும் நல்ல திரைப்படங்களை தயாரிக்க அவர் முதலீடு செய்த கோடி பணம் மீளப்பெற வேண்டும் என்பது எங்களின் பிரார்த்தனை. எங்கள் மத்தியில் பல தயாரிப்பு நிறுவனங்கள் தோன்ற வேண்டும் அதற்கு எங்கள் திரைப்படமும் வெற்றி பெற வேண்டும்.

இத் திரைப்படத்தை தயாரித்த Water Falls Movie Makers நிறுவனத்துக்கு எங்கள் திரைப்படக் குழுவினர் சார்பில் மனமாந்த நன்றிகளையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதுவரையில் எந்தத் தமிழ்த் திரைப்படங்களிலும் இடம்பெறாத அழகு தளங்களில் காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு,இ வவுனியாவில் இத்திரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சி படம்பிடிக்கப்பட்ட போது, வவுனியாவில் வாழ்கின்ற தழிழ் மக்கள் மனமுருகி அக்காட்சியோடு ஒன்றிப்போய் கண்ணீர் சிந்திய காட்சி எம் விழித்திரைகளில் இன்னும் உறைந்திருக்கின்றது.

தொழிநுட்பக் கலைஞர்கள்:
தயாரிப்பு: வு.தில்லைவண்ணன் Water Falls Movie Makers .
மூலக்கதை: வினோலியா
திரைக்கதை. வசனம், இயக்கம்: முகேஷ்
ஒளிப்பதிவு: B.R.ராஐன்
இசை: வி.எஸ்.உதயா
பாடல்கள்: வசீகரன் (நோர்வே)
கலை: கலைராஐ;
நடனம் : காதல் படப் புகழ் கந்தாஸ்
படத்தொகுப்பு: வாசு சலிம்
நிழற்ப்படம் : சிற்றரசு

திரைப்படம் தொடர்பான செய்திகள், விளம்பரங்கள், விமர்சனங்களுக்கு இங்கே அழுத்தவும்.
http://www.wmmfilm.com/
http://www.vnmusicdreams.com/
http://www.tamilcinema.com/
http://www.cinesouth.com/
http://www.indiaglitz.com/
பாருங்கள். திரையரங்கத்திற்கு வாருங்கள்.
உங்கள் அன்புக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
வசீகரன்
ஒஸ்லோ, நோர்வே

'காதல் கடிதம்' விரைவில்..!

'காதல் கடிதம்' திரைப்படம் 15-01-2008 வெளிவர இருக்கின்றது.
Kadhal kaditham movie coming soon (In Europe and other countries)யேசு பாலன் பிறந்தநாளில் இனிப்பான செய்தியும் நத்தார் வாழ்த்துக்களும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காதல் கடிதம் திரைப்படம் 15 -01-2008 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ராஐர் திரையரங்கிலும், வவுனியா நியூ குமரன், கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கிலும் முதலில் வெளிவர இருக்கின்றது.

இதே நேரம் தமிழகத்திலும், நோர்வேயிலும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகின்றது. ஒரு தாய் தந்தைக்கு பிள்ளையை பெற்று வளர்த்து, பெரிய மனிதனாக ஆக்குவது சுலபம். ஆனால் ஒரு படைப்பாளிக்கோஇ கலைஞனுக்கோ நெருப்பாற்றைக் கடந்து, சுனாமியில் தப்பி, வெயிலுக்கு ஆலமர நிழலில் இளைப்பாறுவது போன்ற அனுபவம் கிடைக்கும். ஒரு இறுவட்டோடு ஆரம்பிக்கப் பட்ட கலைப் பயணத்தால் ஒரு திரைப்படம் உருவானது. இதயம் நிறைந்த கனவும், கடின உழைப்பும் வீண் போவதில்லை என்பதற்கு இந்த திரைப்படம் ஒன்றே எங்களுக்கு உதாரணம் போல் அமையும்.

எனதும், வி.எஸ்.உதயா அண்ணாவினுடைய கனவு நிறைவாக தார்மீகமான பொறுப்யை ஏற்று தயாரிப்புப் பணியை திறம்பட செய்த தில்லைநாதன் தில்லைவண்ணன் அவர்களை இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கோருகின்றோம். இச் செய்தியை உங்கள் இதயங்களில் வாங்கி நீங்கள் வாழும் நாடுகளிலும் திரையில் வெளியீடு செய்ய உதவி செய்ய வாருங்கள்.

உங்கள் நாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியீடு செய்ய விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து இத்திரைப் படத்தை இணையத்தில் பத்தோடு பதினொன்றாக தரவிறக்கம் செய்து பார்க்காதீர்கள். திரைக்கு சென்று பார்த்தால் தான் அதன் முழுமை கிடைக்கும்.

வவுனியா புகையிரத நிலையத்தை யாருக்குத்தான் திரையில் பார்க்க ஆசையிருக்காது. யாழ்தேவி தொடரூந்தினை திரையில் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது. இப்படி பலவிடயங்கள் உங்கள் விழிகளுக்கா விருந்து வைக்க காத்திருக்கின்றன.

காதல் கடிதம் திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிபாலாஜி கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு இணையாக உங்கள் இதயத்தை வருடும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிசா ஈழத்துப் பெண்ணாக அறிமுகமாகிறார்.

உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள். நிழல்கள் ரவி, சிறிரஞ்சனி, காதல் திரைப்படப் புகழ் சுகுமார், விஐய் கணேஸ், பிரவீன், இவர்களோடு இலங்கைக் கலைஞர்களில் பொப்பிசைப் பாடகர் ஏ.ஈ.மனோகரன்.

எங்கள் மூத்த கலைஞர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிப்பாளர் திரு.நடராஐசிவம் அவர்கள் கதாநாயகியின் தந்தையாக வாழ, கதாநாயகியின் தாயாக தோன்றுகிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான குணச்சித்திர நடிகை ஒருவர்.
தொழிநுட்பக் கலைஞர்கள்:
தயாரிப்பு : T.தில்லைவண்ணன் Water Falls Movie Makers.
மூலக்கதை: வினோலியா
திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ்
ஒளிப்பதிவு: B.R. ராஐன்
இசை: வி.எஸ்.உதயா
பாடல்கள்: வசீகரன் (நோர்வே)
கலை: கலைராஜ்
நடனம் : காதல் படப் புகழ் கந்தாஸ்,
படத்தொகுப்பு : வாசு சலிம்
நிழற்ப்படம : சிற்றரசு
இப்போதைக்கு இந்த இணையத்தளத்தை பார்வையிடுங்கள் திரைக்கு வாருங்கள் பிறகு பேசலாம். http://www.wmmfilm.com/
அன்புடன்
வசீகரன்.